Saturday 4 February 2012

மூத்த மகனுக்கு அரசியல்களம்; இளைய மகனுக்கு சினிமா


சினிமா, அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தனது மகன்களை இரண்டு துறைகளுக்கும் தனித்தனி வாரிசாக களமிறக்க முடிவு செய்துள்ளார்.
மூத்த மகன் அரசியலில் களமிறங்க பயிற்சி பெற்று வரும் நிலையில், இளையமகன் விரைவில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்படவுள்ளார். சினிமா மூலம் அரசியலுக்கு வந்து, தே.மு.தி.க., என்ற கட்சியை உருவாக்கி குறுகிய காலக்கட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்திற்கு உயர்ந்திருப்பவர் விஜயகாந்த். இவருக்கு விஜய் பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் விஜய் பிரபாகரன், தனியார் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார். இயைமகன் சண்முக பாண்டியன், சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முதலாண்டு படிக்கிறார். சினிமா, அரசியல், குடும்பம் என மூன்று வேடத்தை கனகச்சிதமாக செய்துவரும் விஜயகாந்த், தனது இரண்டு மகன்களை வாரிசாக களமிறக்க முடிவு செய்துள்ளார்.

மூத்த மகனுக்கு அரசியல் ஆர்வம் அதிகம் இருப்பதால், அவரை அரசியலில் களமிறக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். ஆனால், மற்ற கட்சிகளைப்போல் கொல்லைப் புறம் வழியாக, தனது மகனை அரசியலுக்கு அறிமுகம் செய்ய விஜயகாந்த் விரும்பவில்லை. பல்வேறு அரசியல் பயிற்சிகள் அளித்து, தொண்டர்களுடன் பணியாற்ற வைத்து, குறிப்பிட்ட வயதை கடந்தவுடன், அதன்பிறகே மகனுக்கு கட்சி பதவி வழங்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் சரளமாக பேசக்கூடிய விஜய் பிரபாகர், தற்போது, சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பிரெஞ்ச் மொழி கற்றுவருகிறார். மேலும், அரசியலில் களமிறங்குவதற்கு வசதியாக, விஜயகாந்திற்கு நெருக்கமான ஒய்வுபெற்ற ஐ.ஏ. எஸ்., அதிகாரி ஒருவர் மூலம் நிதி நிர்வாகம், பொது மக்கள் மேலாண்மை, அரசியல் வரலாறு உள்ளிட்ட கல்வியையும் கற்று வருகிறார். தமிழக அரசியலுக்கு இதுபோன்ற அரசியல் பயிற்சிகள் தேவை இல்லை என்றாலும், வரும் காலத்தில் டில்லி அரசியலுக்கு தேவைப்படலாம் என்பதால், அதற்கேற்ப பயிற்சிகளை விஜயகாந்த் ஏற்பாட்டில் கற்றுத்தரப்படுகிறது.

இளையமகன் சண்முகபாண்டியன், தந்தையைப் போல சினிமாவில் கதாநாயகனாக நடித்து, பிரபலம் அடைய வேண்டும் என்று விரும்புகிறார். அவரது ஆசைப்படியே, சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்கான பணிகளை விஜயகாந்த் துவக்கியுள்ளார். இதற்காக நடிப்பு, நடனம், சண்டை, உடற்பயிற்சி ஆகியவற்றில் சண்முக பாண்டியன் ஈடுபட்டு வருகிறார். இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப, இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் படம் இருக்க வேண்டும் என்பதால், பல கதைகளை கேட்டு, மூத்த மகன் விஜய் பிரபாகர் ஆலோசனைப்படி நான்கு கதைகளை இறுதியாக விஜயகாந்த் தேர்வு செய்துள்ளார். இதில் ஒரு கதை இறுதி செய்யப்பட்டு, விரைவில் விஜயகாந்த் மகன் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.

- எஸ்.அசோக்குமார் -

No comments:

Post a Comment